• Jul 24 2025

நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவால் கண்ணீரில் தத்தளிக்கும் திரையுலகம்; மனதை உருக்கும் பதிவுகள் இதோ!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான மயில்சாமி அவர்கள் இன்றைய தினம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். 


அதாவது இன்று அதிகாலை வரை சிவராத்திரி பூஜையில் இவர் இருந்துள்ளார். பின்பு வீட்டிற்கு செல்லும் போது தான் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கே ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகின்ற இந்த நேரத்தில், இவரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.


அந்தவகையில் நடிகர் யோகிபாபு இரங்கல் தெரிவித்து பேசுகையில் "சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் இருந்தே மயில்சாமி அண்ணனை எனக்கு தெரியும். நிறைய பேருக்கு அண்ணன் உதவி இருக்கிறார். அண்ணனின் மறைவு மிகப்பெரிய இழப்பு” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் நகைச்சுவை நடிகர் சார்லி கூறுகையில், "நானும் மயில்சாமியும் முதல் சந்திப்பிலேயே நண்பர்கள் ஆகிவிட்டோம். தீவிர சிவபக்தரான மயில்சாமி, சிவராத்திரி அன்றே மறைந்துவிட்டார். அவரது இழப்பு என்றும் ஈடு செய்ய முடியாத இழப்பு" என சார்லி தெரிவித்துள்ளார்.  


நடிகரும் இயக்குநருமான மனோபாலா கூறுகையில் "சென்னையில் மழை வெள்ளம், புயல் வந்துவிட்டால் போதும் உதவி செய்ய படகை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். மயில்சாமி மாதிரி ஒரு வள்ளலை பார்க்க முடியாது. இதற்கெல்லாம் பணம் அதிகம் செலவாகுமே என்று சொன்னால்.. என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு போகப்போகிறோம் எனக் கூறுவார் மயில்சாமி. திரைத்துறையினர் தொடர்ந்து மறைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சரத்குமார் கூறுகையில் "எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


அதேபோல் கமல்ஹாசன் கூறுகையில் “நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.


நடிகர் விக்ரம், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் "உங்களின் நகைச்சுவைகள் என்றென்றும் நினைவுகூரப்படும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


மேலும் நகைச்சுவை நடிகர் வையாபுரி கூறுகையில் "பசி என்று வருபவர்களுக்கு பாக்கெட்டில் இருப்பதை கொடுத்துவிடுவார் மயில்சாமி" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கோவை சரளா தெரிவிக்கையில் "சாலிகிராமம் முழுவதும் சுத்திட்டு இருப்பாரு, நிறைந்த சிரிப்போடு, நிறைந்த மனதோடு பழகிற ஒரு நல்ல மனிதர் சிவராத்திரி அதுவுமாக அவரது இறப்பு நடந்திருக்கு, நேரடியாகவே அவரது ஆத்மா இறைவனடி சேர்ந்திருக்கின்றது" எனக் கூறியுள்ளார்.

நடிகர் ஆரி அர்ஜுனன் தெரிவிக்கையில் "மயில்சாமி" அண்ணனின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த  இரங்கல்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதேபோன்று  நடிகர் எம்.எஸ். பாஸ்கரும் "சகோதரனாக, மைத்துனனாக, வள்ளலாக வாழ்ந்தவன் மயில்சாமி. மூன்று நாளுக்கு முன் தொலைபேசியில், சிவராத்திரிக்கு கோவிலுக்கு போக அழைத்தார். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றேன். மிகப்பெரிய சிவபக்தர், சிவன் இவரை அழைத்துக் கொண்டார். மயில்சாமியின் ஆன்மா சிவன் நிழலில் இளைப்பாறட்டும்" என கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வெங்கட்பிரபு, ராதிகா, சாக்ஷி அகர்வால், தயாரிப்பாளர் தனஞ்சயன் உட்பட ஏராளமான திரைப்பிரபலங்களும் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.